உடுமலை, டிச. 4: உடுமலை அருகே சர்க்கார்புதூர் கிராமத்தில், விளைநிலங்களில் காட்டுப்பன்றிகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இப்பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பன்றிகளின் அட்டகாசம் தொடர்கிறது. சுப்ரமணி என்பவரது தோட்டத்தில் பயிரிட்டிருந்த மக்காச்சோள பயிர்களை பன்றிகள் சேதப்படுத்தியுள்ளது. காட்டுபன்றிகளின் அட்டகாசத்தை தடுக்க பலமுறை புகார் தெரிவித்தும் வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதுபற்றிய செய்தி நேற்று தினகரன் நாளிதழில் படத்துடன் வெளியானது. இதைத்தொடர்ந்து, நேற்று வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். உடுமலை வனச்சரகர் தனபாலன், வனவர் தங்கபாண்டியன் மற்றும் வனப்பாதுகாவலர்கள், வனக்காவலர்கள், வேட்டைதடுப்பு காவலர்கள் என 15க்கும் மேற்பட்டோர் சர்க்கார்புதூர் கிராமத்துக்கு சென்று ஆய்வு செய்தனர்.