கொடைக்கானல், நவ. 27: கொடைக்கானல் சாலைகளில் திரியும் மாடுகளால் போக்குவரத்திற்கு அடிக்கடி இடையூறு ஏற்படுவதுடன் விபத்துகளும் நடந்து வருகின்றன. கொடைக்கானல் நகர் சாலைகளில் மாடுகள் அதிகளவில் சுற்றித்திரிவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக கொடைக்கானலின் பிரதான சாலைகளான நாயுடுபுரம், அண்ணாசாலை, லாஸ்காட் சாலையில் மட்டும் 50க்கும் மேற்பட்ட மாடுகள் முகாமிட்டு மாட்டுத்தொழுவமாக மாற்றியுள்ளது. இதனால் போக்குவரத்திற்கு அடிக்கடி இடையூறு ஏற்படுவதுடன் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொடைக்கானல் சீனிவாசபுரம் பகுதியான வத்தலக்குண்டு சாலையில் மாடு ஒன்று வாகனத்தில் அடிபட்டு போக்குவரத்து தடைபட்டது.