காரிமங்கலம், நவ.27: காரிமங்கலம், பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள துவரை செடிகளில் பூச்சி, புழுக்கள் தாக்கி சேதம் ஏற்பட்டுள்ளதால், வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்து ஆலோசனை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளான அடிலம், எலுமிச்சனஅள்ளி, பொம்மஅள்ளி மற்றும் பாலக்கோடு அடுத்த பெல்ரம்பட்டி, கரகூர், பஞ்சப்பள்ளி, ரெட்டியூர், காட்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் துவரை பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் இந்த துவரை செடிகளை சில வகை புழு, பூச்சிகள் தாக்கி விவசாயிகளுக்கு கடும் பொருளாதார சேதத்தை விளைவிக்கின்றன. பூச்சிகளின் தாக்குதல் துவரையின் இளம் பருவம் முதல் முதிர்பருவம் வரை உள்ளது. இவற்றில் குறிப்பாக, சாறு உண்ணும் பூச்சிகளான தத்துப்பூச்சி, எம்போஸ்கா கெர்ரி, காய் உண்ணும் பூச்சிகளான புள்ளிகாய் புழு, மருக்கா விட்ரேட்டா உள்ளிட்ட பல்வேறு பூச்சி இனங்கள் உள்ளது.