திருவள்ளூர், நவ. 26: திருவள்ளூர் - திருத்தணி நெடுஞ்சாலையில், சென்டர்மீடியன் துவங்கும் இடத்தில் எச்சரிக்கை பலகையோ அல்லது ரிப்ளக்டர் ஸ்டிக்கரோ வைக்காததால் கனரக வாகனங்கள் தினமும் விபத்துகளை சந்தித்து வருகின்றன. உயிர்பலி ஏற்படுமுன் நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. திருவள்ளூரில் மணவாளநகர் முதல் டோல்கேட் வரை சென்டர்மீடியனை நெடுஞ்சாலை துறையினர் அமைத்துள்ளனர். இச்சாலை வழியாக ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இரவு நேரங்களில் தொழிற்சாலைகளுக்கு பொருட்களை ஏற்றிக்கொண்டு ஏராளமான கனரக வாகனங்களும் சென்று வருகிறது. இதில், டோல்கேட் பகுதியிலும், பூண்டி செல்லும் சாலையிலும் சென்டர்மீடியன் துவங்கும் இடத்தில், எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்படவில்லை. மேலும் ரிப்ளக்டரும் இல்லை. இதனால், வாகன ஓட்டிகள் தினமும் மேற்கண்ட இடங்களில் தினமும் விபத்தில் சிக்குகின்றனர். மேலும், சென்டர்மீடியனும் சேதமாகி வருகிறது. பல உயிரிழப்புகளும் ஏற்படுவதோடு, வாகனங்களும் சேதமாகிறது.