×

பேரூராட்சி அலுவலகம் அருகே காட்சி பொருளாய் மின் விளக்கு

சாயல்குடி, நவ. 22:   சாயல்குடி பேரூராட்சி அலுவலகம் அருகே அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுர மின் விளக்குகள் எரியாமல் கிடப்பதால் அவதிபட்டு வருவதாக  பொதுமக்கள் கூறுகின்றனர்.
சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலையோரம் பேரூராட்சி அலுவலகம் அமைந்துள்ளது. இதன் அருகே சதுரயுகவள்ளி நகர், அரண்மணை தெரு, காவல் நிலையம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வருவாய் அலுவலர், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், சிவன்கோயில், முருகன்கோயில் ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்டவை அமைந்துள்ளது.
இதனால் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. செவ்வாய், வெள்ளி, சனி மற்றும் விஷேச நாட்களில் இப்பகுதி கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால் பேரூராட்சி ஊரணி கரையில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. இந்த விளக்குகள் கடந்த ஒரு மாதமாக எரியாததால் இப்பகுதி இருளில் மூழ்கி கிடக்கிறது. இதனால் பெண்கள் இரவு நேரங்களில் வெளியில் வந்து செல்ல அவதிப்படுவதாக  கூறுகின்றனர்.
மேலும் தொடக்கப் பள்ளி அருகே செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் வேகத்தடை உள்ளது. வேகத்தடை வாகனத்தின் வெளிசத்திற்கு சரியாக தெரியாமல் இருப்பதால், வேகமாக வரும் வாகனங்கள் இருளில் அமைந்துள்ள வேகத்தடையால் விபத்து ஏற்பட்டு வருவதாக கூறுகின்றனர்.
தொடக்க பள்ளி பின்புறம் வி.ஏ.ஓ அலுவலகம் உள்ளது. தற்போது விவசாயம் காலம் என்பதால் விவசாயிகள் தேசிய பயிர்காப்பீடு திட்டத்தில் பதிவு செய்வதற்கு தேவையான சான்றிதழ்களை விஏஓ.களிடம் பெற்று வருகின்றனர். கூட்டம் அதிகமாக இருப்பதால் சான்று வாங்குவதற்கு இரவு நேரமாகி விடுகிறது. இதனால் இப்பகுதி போதிய வெளிச்சம் இன்றி அவதிப்படுவதாக விவசாயிகளும் புகார் கூறுகின்றனர். எனவே பழுதாகி கிடக்கிற உயர்கோபுர மின்விளக்குகளை பழுது பார்த்து இரவு நேரங்களில் எரியவிட பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : office ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...