கள்ளக்குறிச்சி, நவ. 20: கள்ளக்குறிச்சி புதிய மாவட்டம் துவக்க விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழா வருகிற 26ம்தேதி நடைபெறுகிறது. இந்நிகழ்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு புதிய மாவட்டத்தை மக்கள் பயன்பாட்டிற்கு வரும் விதமாக துவக்கி வைக்க உள்ளார். இவ்விழா கள்ளக்குறிச்சி-பெருவங்கூர் சாலை பகுதியில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது.இதையடுத்து அங்கு விழா மேடை அமைக்கும் பணி கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட ஆட்சியர் கிராண்குராலா தலைமையில் நேற்று முன்தினம் துவங்கியது. இந்நிலையில் நேற்று விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வருவாய்) ஸ்ரேயாபிசிங், கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட துவக்க விழா நடைபெற உள்ள இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வரைபடத்தை பார்வையிட்டு மேடை அமைக்கும் இடம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.