ஊத்தங்கரை, நவ.20: ரயிலில் இருந்து தவறி விழுந்த செல்போனுக்காக ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்த ஊத்தங்கரை மாணவனை மீட்டு போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.ஊத்தங்கரை அடுத்த பரசுராமன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சங்கர். லாரி டிரைவரான இவரது மகன் நவீன்குமார். இவர், கோவையில் தங்கியிருந்து அங்குள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், விடுமுறையையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் ஊத்தங்கரைக்கு வந்து கொண்டிருந்தார். ஈரோடு பக்கமாக வநதபோது, படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த நவீன்குமார் கையில் இருந்த செல்போன் தவறி கீழே விழுந்தது. உடனே, அதனை எடுப்பதற்காக நவீன்குமார் ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில், தலை, நெற்றி, கை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து உடன் பயணம் செய்த முகமது பாசில் என்பவர் ஈரோடு ரயில் நிலையத்தில் இறங்கி ரயில்வே போலீசாரிடம் நடந்ததை தெரிவித்தார். ரயில்வே போலீசார் விரைந்து சென்று நவீன்குமாரை மீட்டு உரிய சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து, பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து வரவழைத்து நவீன்குமாரை ஒப்படைத்தனர். செல்போனுக்காக உயிரை விடும் அளவுக்கு நடந்து கொண்ட நவீன்குமாருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.