அவமானத்தால் பெண் தற்கொலை ஆத்திரத்தில் உறவினருக்கு வெட்டு

மயிலாடுதுறை, நவ.19: மயிலாடுதுறை அருகே அவமானத்தால் பெண் தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஆத்திரத்தில் உறவினருக்கு அரிவாள் வெட்டி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவில் குரங்குபுத்தூர் பகுதியை சேர்ந்த ஆனந்தன் மகள் ஆதித்யா(20). இவர் கடந்த 17ம் தேதி அதே பகுதியில் உள்ள தாத்தா தியாகராஜன் வீட்டில் துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ஆனந்தன் அளித்த புகாரின்பேரில் செம்பனார்கோவில் போலீசார் வயிற்றுவலியால் தூக்குப்போட்டு ஆதித்யா தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப்பதிவு செய்தனர். உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே ஆதித்யாவின் உறவினர்கள் நேற்று தலைச்சங்காடு திருமஞ்சனவீதியில் உள்ள மாணிக்கம் மகன் ராஜா(45) என்பவரை வீடுபுகுந்து அரிவாளால் சரமாரியாக வெட்டிப்போட்டு விட்டு ஓடிவிட்டனர்.  படுகாயமடைந்த ராஜாவை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து செம்பனார்கோவில் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது, அரிவாளால் வெட்டுப்பட்டு படுகாயமடைந்த ராஜாவின் மைத்துனர் கார்த்தி, இவருக்கு கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் ஆகியுள்ளது. அவர் வீட்டிற்கு சரிவர வராமல் இருந்துள்ளார். இதற்குக் காரணம் அதே பகுதியில் உள்ள ஆதித்யாவின் வீட்டிற்கு கார்த்தி அடிக்கடி செல்கிறார் என்று கார்த்தியின் மனைவி மற்றும் அவரது மாமனார் மாமியார் செம்பனார்கோவில் காவல்நிலையத்தில் அளித்த புகாரில் தெரிவித்திருந்தார்.  செம்பனார்கோவில் போலீசார் மனுவாக விசாரணை நடத்தினர். கார்த்தியை அழைத்து மனைவி புகார் சொல்லாத அளவிற்கு நடந்துகொள்ள வேண்டும் என்று அறிவுரைக்கூறி, வேறு இடத்திற்கு குடும்பத்தை அழைத்துச்சென்று குடித்தனம் வைப்பது என்று முடிவெடுத்து அதற்கு கார்த்தியும் ஒத்துக்கொண்டு சென்றுள்ளார். இந்த சம்பவம் கேள்விப்பட்டதும் தன் குடும்பத்தின்மீது புகார் அளித்துள்ளதைக் கேட்டு ஆதித்யா தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

ஆதித்யா சாவிற்கு காரணமான கார்த்தியை ஆதித்யாவின் உறவினர்கள் தேடிச்சென்றுள்ளனர். கார்த்தியின் மைத்துனர் ராஜா வீட்டிற்குச் சென்று கார்த்தியை கேட்டுள்ளனர், அவர் இல்லை என்று தெரிவித்துள்ளார், ராஜா சிங்கப்பூரில் வேலை பார்த்துவிட்டு சென்ற மாதம்தான் ஊருக்கு வந்திருந்தார், ஆனால் கார்த்தியை தேடிவந்தவர்கள் கார்த்தியின் தங்கைக்கணவர் ராஜாவை சரமாரியாக அரிவாளால் வெட்டிப்போட்டுவிட்டு ஓடிவிட்டனர் என்றும் வந்தவர்கள் முகமூடி அணிந்திருந்ததாகவும் ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்தும் செம்பனார்கோவில் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: