திருக்கோவிலூர் பகுதியில் சாலை அகலப்படுத்தும் பணி தீவிரம்

திருக்கோவிலூர், நவ. 19: திருக்கோவிலூர் அருகே சாலை அகலப்படுத்தும் பணி நடைபெறுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் தேசிய சாலை, மாநில சாலை, ஊராட்சி சாலை பணிகள் வேகமாக நடந்து வருகிறது. அதன்படி விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர்- விழுப்புரம் சாலை பணிகள் நீண்ட நாட்களாக சாலை பழுதடைந்தும், சாலை அகலப்படுத்தாமல் இருந்த காரணத்தால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர். திருக்கோவிலூரில் இருந்து மடப்பட்டுசாலை, திருவண்ணாமலை சாலை, உளுந்தூர்பேட்டை, கள்ளிக்குறிச்சி அனைத்து சாலைகளும் விரிவாக்கம் செய்யப்பட்டு பணிகள் கடந்த நான்கு வருடத்திற்கு முன் போடப்பட்டதால் வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வந்தனர். இதற்கு மாறாக திருக்கோவிலூர்- விழுப்புரம் சாலை மட்டும் பணிகள் ஏதும் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால் திருக்கோவிலூரில் இருந்து விழுப்புரம் செல்லும் பொதுமக்கள் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். தற்போது சாலையின் இருபுறத்திலும் பள்ளம் தோண்டப்பட்டு விரிவாக்க பணிகள் நடைபெறுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: