போச்சம்பள்ளி, நவ.12: போச்சம்பள்ளியில், பருவம் தவறிய மாங்காய் விளைச்சலையொட்டி சீசன் துவங்கியது. ஒரு டன் ₹50 ஆயித்திற்கு விற்பனை செய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மா சாகுபடியில் போச்சம்பள்ளி தாலுகா 2ம் இடம் வகிக்கிறது. இங்கு அல்போன்சா, பங்கனப்பள்ளி, நீலம், செந்தூரா, மல்கோவா, பீத்தர் ஆகிய ரகங்கள் சாகுபடி செய்யப்படுகிறது. பொதுவாக டிசம்பர் இறுதி வாரம் முதல் ஜனவரி இறுதிக்குள் மாமரங்களில் பூக்க தொடங்கி ஜூன், ஜூலை மாதத்தில் மா அறுவடை செய்யப்படும். கடந்த ஆண்டு விளைச்சல் அமோகமாக இருந்த நிலையில், யாரும் விலைக்கு வாங்க முன்வரவில்லை. இதனால், விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்தனர். இந்த பிரச்னையை சமாளிக்க, போச்சம்பள்ளி, பெரியகரடியூர், ஓலைப்பட்டி, சாலமரத்துப்பட்டி, தாதம்பட்டி, ஒட்டதெரு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், மா விவசாயிகள் கடந்த சில வருடங்களாக சுமார் 20 ஏக்கர் பரப்பில் பருவம் தவறிய மா சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.