விழுப்புரம், நவ. 8: குறு, சிறு தொழில்களுக்காக அமைக்கப்பட்ட லகு உத்யோக் பாரதி அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் ஜெயக்குமார் நேற்று விழுப்புரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வரையறையை அறிவிக்க உள்ளது. தற்போது இயந்திரங்களின் மூலதனத்தை பொறுத்து ரூ.25 லட்சம் வரையில் மூலதனம் உள்ள தொழில்கள் குறுந்தொழில்களாகவும், ரூ.25 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை உள்ள தொழில்கள் சிறுதொழிலாகவும், ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடி வரை நடுத்தர தொழில்கள் எனவும் வரையறை செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த வரையறையை மாற்ற முயற்சிகள் நடந்து வருகிறது. அதில் ரூ.275 கோடி வரையுள்ள தொழில்கள் இந்த சலுகைகளை பெற தகுதியானவை என மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரிகிறது.தற்போதைய மூலதன நடைமுறையே தொடர வேண்டும் எனவும், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ரூ.50 லட்சம் வரை இயந்திர தளவாடங்கள் மூலதனம் மற்றும் தளவாட மூலதனம் உள்ள தொழில் குறுந்தொழில் எனவும், ரூ.50 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை உள்ள தொழில்கள் சிறு தொழில்கள் எனவும் அறிவிக்கப்பட வேண்டும். உற்பத்தி சார்ந்த சேவை நிறுவனங்கள் மட்டும் இந்த வரையறையில் சேர்க்கப்பட வேண்டும். நடுத்தர தொழில்களை இந்த வரையறையில் இருந்து நீக்க வேண்டும்.