விழுப்புரம், நவ. 7: தமிழ்நாடு காவல்துறையில் 8,825 பணியிடங்களை பூர்த்தி செய்வதற்கான உடல்தகுதி தேர்வு நேற்று முதல் தொடங்கியது. விழுப்புரம், கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கான தேர்வு நேற்று ஆயுதப்படையில் தொடங்கியது. முதல்நாளில் 831 பேர் பங்கேற்றனர். ஐஜி செந்தாமரைக்கண்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் 2,465 இரண்டாம்நிலை காவலர்கள் (ஆயுதப்படை), 5,962 இரண்டாம்நிலை காவலர்கள் (தமிழ்நாடு சிறப்பு காவல் படை), 208 இரண்டாம் நிலை சிறை காவலர்கள் மற்றும் 191 தீயணைப்போர் பதவி என 8,826 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் 6ம் தேதி வெளியிடப்பட்டது. தொடர்ந்து இதற்கான தேர்வு தமிழகம் முழுவதும் கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி 32 மாவட்டங்களில் 228 மையங்களில் நடந்தது. சுமார் 3 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினார்கள். விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை 17,114 ஆண்களும், 3,160 பெண்கள் உள்ளிட்ட மொத்தம் 20,274 பேர் இந்த தேர்வை எழுதினார்கள். எழுத்து தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியாகின. இதனிடையே எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடல்தகுதி தேர்வு மற்றும் உடல்திறன் தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் தொடங்கியது.