விழுப்புரம், நவ. 6: விழுப்புரத்தில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 2 இடங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் கட்டபொம்மன்நகர் பகுதியில் தனியார் செல்போன் நிறுவனம் டவர் அமைப்பதற்கான பணிகளை நேற்று தொடங்கியது. ஜேசிபி இயந்திரங்களுடன் சென்று பள்ளம் தோண்டினர். அப்போது பொதுமக்கள் பணிகளை தடுத்து நிறுத்தி, இப்பகுதியில் செல்போன் டவர்அமைக்கக்கூடாது என வலியுறுத்தினர். தொடர்ந்து அவர்கள் கூறுகையில், இப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள், பள்ளி, அங்கன்வாடி உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புக்கு மத்தியில் செல்போன் டவர்அமைத்தால் கதிர்வீச்சு ஏற்பட்டு குழந்தைகள், வயதானவர்களுக்கு தொற்றுநோய் பாதிப்பு ஏற்படும். எனவே இந்த பகுதியில் செல்போன் டவர் அமைக்கக்கூடாது. அதிகாரிகளும் உரிய அனுமதி வழங்கக்டாது என்று வலியுறுத்தினர்.