காரைக்குடி, நவ.6: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்டத்தின் சார்பில் இயக்கப்படும் பெரும்பாலான பஸ்கள் பயணம் செய்ய லாயக்கற்ற நிலையில் இருப்பதாக பயணிகள் புலம்பி வருகின்றனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்டம் சிவகங்கை, ராமநாதபுரம் என இரண்டு மாவட்டங்களை உள்ளடக்கி செயல்படுகிறது. இக்கோட்டத்துக்கு உட்பட்ட 11 கிளைகளில் இருந்து 700 பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் நகர பஸ்கள் 280, மொபசல் பஸ்கள் 420. தவிர இக் கோட்டத்தில் இருந்து கோவை, ஈரோடு, விழுப்புரம், சென்னை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறன. காரைக்குடி கிளையில் இருந்து 68 பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் நகரபஸ்கள் 24, மொபசல் பஸ்கள் 44ம் இயக்கப்படுகிறது. இக்கிளையில் இருந்து திருச்சி, மதுரை, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, கோவை, ஈரோடு உட்பட பல்வேறு பகுதிகளுக்கு பஸ் இயக்கப்படுகிறது. காரைக்குடி கிளையில் இயங்ககூடிய பஸ்கள் தவிர சிவகங்கை, ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர் ஆகிய கிளைகளில் இயக்கப்படும் நகர, மொபசல் பஸ்கள் மிகவும் பழையதாகவும் கடகட சத்துடனும்தான் செல்கின்றன. இதனால் பயணிகள் முகம் சுளிக்கும் நிலை ஏற்படுகிறது. விபத்து ஏற்பட்ட பஸ்களை முறையாக பழுதுபார்க்காமல் ஆங்காங்கே சிறுவேலை பார்த்த நிலையிலும், உரிய பராமரிப்பு இன்றியும் இயக்கப்படுகின்றன. இதனால் பஸ்சில் உள்ள சீட்டுகள், ஜன்னல் மற்றும் மேற்கூரை மிகவும் மோசமாக உள்ளது. மழை நேரங்களில் ஒருசில பஸ்களில் உள்ளே ஒழுகுகிறது.