குஜிலியம்பாறை, நவ. 6: குஜிலியம்பாறை அருகே பில்லாக்காபட்டியில் குடிசை வீடு தீ விபத்தில் இதுவரை நிவாரணம் வழங்கவில்லை என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் புகார் தெரிவித்தனர். குஜிலியம்பாறை தாலுகா, ஆர். கோம்பை அருகே பில்லாக்காபட்டியை சேர்ந்தவர் சுந்தரம் (55). கூலித்தொழிலாளி. இவர் தனக்கு சொந்தமான இடத்தில் மேற்கூரை தகர சீட்டினாலும், பக்கவாட்டில் பனை ஓலையிலான குடிசை வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆக.19ம் தேதி வீட்டில் இருந்த விறகு அடுப்பு மூலம் தீ பரவி, பனை ஓலையில் பற்றியதில் குடிசை வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது. இந்த தீ விபத்தில் வீட்டிலிருந்த டிவி, கட்டில், பாத்திரங்கள் என ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்களும், ஆடு விற்பனை செய்தும், 100 நாள் வேலை கூலி சேமிப்பு என ரூ.25 ஆயிரமும் எரிந்து போனது. தகவலறிந்து வந்த வருவாய்த்துறையினர் எரிந்த வீட்டை பார்வையிட்டு உரிய நிவாரணத்தொகை வழங்கப்படும் என பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் தெரிவித்தனர். ஆனால் 2 மாதத்திற்கு மேலாகியும் நிவாரண தொகை வரவில்லை.