அவிநாசி,நவ.6: அவிநாசி பேரூராட்சிக்குட்பட்ட கைகாட்டிப்புதூர் வளமீட்பு பூங்காவில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் குப்பைகளை பிரித்தெடுக்கும் உரக்களத்தை மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, அவர் கூறுகையில், ‘‘அவிநாசி பேரூராட்சிக்குடப்ட்ட 18 வார்டுகளிலும் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் பெறப்பட்டு வருகிறது. இவ்வாறு பெறப்படும் குப்பைகள் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் கைகாட்டிப்புதூர் வளமீட்பு பூங்காவில், 89 லட்சம் மதிப்பீட்டில் அமைந்துள்ள உரக்களத்தில் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த குப்பைகளை கொண்டு விண்ட்ரோ முறையில் மாட்டுச்சாணம் தெளித்து, 15 நாட்களுக்கு ஒருமுறை திருப்பி விட்டு, ஆண்டுக்கு 23 டன் இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. மேலும், இயற்கை உரம் காய்கறி கழிவு கொண்டு மண்புழு உரம் தயாரித்து விற்கப்பட்டு வருகிறது. மேலும், இங்குள்ள வளமீட்பு பூங்காவில் துளசி, நொச்சி, தூதுவளை, பிரண்டை, ஆடாதொடை உள்ளிட்ட மூலிகை செடிகளும், நாட்டு மரங்களான வேம்பு, புங்கன், அரசமரம், அத்தி, மலைவேம்பு, புளியமரம், நாவல் உள்ளிட்ட நாட்டு மரங்களும், நர்சரி முறையில் வளர்க்கப்பட்டுவருகிறது.