குமாரபாளையம், நவ.5: குமாரபாளையத்தில் ₹1.75 ஒரு கோடி செலவில் கட்டப்பட்ட குடிநீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.குமாரபாளையம் நகராட்சி சின்னப்பநாயக்கன்பாளையம் சந்தைப்பேட்டை வளாகத்தில் ₹1.75 கோடி செலவில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி கட்டி முடிக்கப்பட்டது. 3 ஆண்டுகள் கடந்த போதிலும் இதுவரை தொட்டியில் நீரேற்றப்படவே இல்லை. தொட்டியின் தரைப்பகுதி சமூக விரோதிகளின் புகலிடமாக மாறியுள்ளது. பகலிரவு பாராமல் இங்கு தாயம், சீட்டாட்டம் விளையாடப்படுகிறது. உடைத்து வீசப்பட்டுள்ள மதுபாட்டில்கள் கால்களை பதம் பார்த்து வருகிறது. உரிய பராமரிப்பின்றி கிடப்பதால் தொட்டியின் தூண்கள் விரிசல் விட்டவாறு காரை பெயர்ந்து திறக்கப்படும் முன்பே, தகுதி இழந்துவிடும் தன்மையில் உள்ளது.குமாரபாளையம், பவானி மற்றும் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த குற்றவாளிகள் பலரும் இங்கு கூடுவதால் அச்சத்திற்குள்ளாகி வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்ததையடுத்து, முன்னாள் நகர மன்ற தலைவர் சேகர் மற்றும் திமுக நிர்வாகிகள் குடிநீர் தொட்டி வளாகத்தை சென்று பார்த்தனர்.