திண்டுக்கல், நவ. 5: குஜிலியம்பாறை கரும்பாறைபட்டி மக்கள் வீட்டு மனை பட்டா கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர். குஜிலியம்பாறை வட்டம், கருங்கல் கிராமம் கரும்பாறைபட்டியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மக்கள் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் தங்களது புகைப்படத்துடன் கூடிய மனுவை கலெக்டர் விஜயலட்சுமியிடம் அளித்தனர். அந்த மனுவில், ‘கரும்பாறைபட்டியில் 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
எங்களது பாதி நிலங்களை ரயில்வே நிர்வாகம் எடுத்து கொண்டது. இதனால் ஒரே வீட்டில் இரண்டு, மூன்று குடும்பங்களாக வசித்து வருகிறோம். போதிய இடவசதியின்றி மிகவும் சிரமப்பட்டு வருகின்றோம். எங்களுக்கு கீழ்புறம் உள்ள தீர்வை காணப்படாத அரசு புறம்போக்கு தரிசு நிலம் உள்ளது. இங்கு எங்களது முன்னோர்கள் 75 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தனர். தற்போது சர்வேயின் 333/3 அந்த இடத்தில் எங்களுக்கு 3 சென்ட் வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.