விழுப்புரம், அக். 31: விழுப்புரம் மாவட்டத்தில் சர்வதேச பேரிடர் குறைப்புதின விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் சுப்ரமணியன் துவக்கி வைத்தார். ஆண்டுதோறும் அக்டோபர் 13ம் தேதியை பேரிடர் குறைப்பிற்கான சர்வதேச தினமாக ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ளது. ஆனால் அன்றைய தினம் விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால், பேரிடர் குறைப்பு தினம் கடை
பிடிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த சர்வதேச பேரிடர் குறைப்புதின பேரணி விழுப்புரத்தில் நேற்று தொடங்கியது. ஆட்சியர் சுப்ரமணியன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். சிக்னல் வரை சென்ற இப்பேரணியில் மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.
மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில் தீயணைப்புத்துறை சார்பில் கனமழை, வெள்ளம், கட்டிடங்கள் இடிந்துவிழுதல், தீவிபத்து ஆகியவற்றிலிருந்து எவ்வாறு மீள்வது, பொதுமக்களை எவ்வாறு பாதுகாப்பது மற்றும் மீட்புபணிகள் மேற்கொள்வது குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர். இதில் கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயாபிசிங், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பிரபாகர், வருவாய் கோட்டாட்சியர் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி: வருவாய் துறை சார்பில் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடந்தது. கள்ளக்குறிச்சி சார் ஆட்சியர் காந்த் தலைமை தாங்கி பேரணியை துவக்கி வைத்தார். கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராமநாதன், தாசில்தார் ராஜசேகர், இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் வரவேற்றார். பள்ளி வளாகத்தில் துவங்கிய பேரணி முக்கிய சாலைகள் வழியாக சென்றது. கள்ளக்குறிச்சி சப்இன்ஸ்பெக்டர் மணிகண்டன், கள்ளக்குறிச்சி தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சேகர், வருவாய் ஆய்வாளர் ராஜா, கிராம நிர்வாக அலுவலர் தேன்மொழி, பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.