திண்டிவனம், அக். 27: திண்டிவனம் அடுத்த பாதிரி ஏரிக்கரை அருகே ஏற்பட்ட இரு வேறு சாலை விபத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை மற்றும் புறநகர்களில் தங்கி பணியாற்றி வரும் ஊழியர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதனால் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த வாகனங்கள் அனைத்தும் முந்தியடித்துக்கொண்டு சென்றன. அப்போது அதிகளவு மழை பெய்ததால் ஆங்காங்கே சிறு விபத்துக்கள் ஏற்பட்டது. சென்னையிலிருந்து தனியார் சொகுசு பேருந்து கோயமுத்தூர் சென்றுகொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி பேருந்து சாலையின் குறுக்கே நின்றது. இதனால் சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு திண்டிவனம் நோக்கி வந்த அனைத்து வாகனங்களும் ஒன்றன்பின் ஒன்றாக அணி
வகுத்து நின்றது.
இதேபோல் அதே இடத்தில் எதிர் சாலையில் திண்டிவனத்திலிருந்து சென்னை நோக்கி சென்ற கார் சாலை ஓரம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. அவர்கள் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினர். இதனால் திண்டிவனத்தில் இருந்து சென்னை செல்லக்கூடிய வாகனங்களும், சென்னையிலிருந்து திண்டிவனம் நோக்கி செல்லக்கூடிய வாகனங்களும் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நின்றதால் சாலை இருபுறமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த ஒலக்கூர் காவல் நிலைய போலீசார் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர் ராமதுரை ஆகியோர் போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.