சின்னசேலம், அக். 25: கல்வராயன்மலை மக்கள் சாதி சான்று உள்ளிட்ட சான்றிதழ்களை பெற 60 கிமீ தூரம் பயணம் செய்து சின்னசேலம் தாலுகா அலுவலகத்திற்கு வர வேண்டிய அவலநிலை உள்ளது. எனவே வெள்ளிமலையை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா அறிவிக்க வேண்டும் என மலைமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக பிரிந்துள்ளது. அதற்கான இடம் ஆய்வுப்பணி, எல்லை வரையறை பணிகளை கவனிக்க தனி அலுவலர் நியமிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது. சின்னசேலம் தாலுகாவைப் பொறுத்தவரை சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்தின் ஒரு பகுதி மற்றும் கல்வராயன்மலைப்பகுதியை உள்ளடக்கி உள்ளது. கல்வராயன்மலையில் மக்கள் தொகை குறைவாக இருந்தபோதிலும் நிலப்பரப்பளவில் மிகப்பெரியது ஆகும். கல்வராயன்மலையில் கரியாலூர், வெள்ளிமலை, மணியார் பாளையம், சேராப்பட்டு உள்ளிட்ட 172 சிறிய, பெரிய கிராமங்கள் உள்ளது. வெள்ளிமலை, இந்நாடு, பொட்டியம் உள்ளிட்ட 15 ஊராட்சிகள் உள்ளன. கல்வராயன் மலையில் உள்ள மக்கள் சாதி சான்று, ஆதார் திருத்தம், இதர சான்றுகள் உள்ளிட்ட எந்த வேலையாக இருந்தாலும் மலையில் இருந்து 60 கிலோ மீட்டர் பயணம் செய்து கச்சிராயபாளையம் வந்து பின் அங்கிருந்து சின்னசேலம் தாலுகா அலுவலகம் வரவேண்டும்.