விழுப்புரம், அக். 24: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது.
தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 21ம் தேதி நடந்தது. விக்கிரவாண்டி தொகுதியில் புகழேந்தி (திமுக), முத்தமிழ்ச்செல்வன் (அதிமுக), திரைப்பட இயக்குநர் கவுதமன் உள்ளிட்ட 12 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்கு பதிவிற்காக விக்கிரவாண்டியில் 275 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. மொத்தமுள்ள வாக்காளர்கள் 2,23,387 பேரில் 93,633 ஆண் வாக்காளர்களும், 95,022 பெண் வாக்காளர்களும், 4 திருநங்கைகள் என மொத்தம் 1,88,659 பேர் வாக்களித்தனர். 84.41 சதவீத வாக்குகள் பதிவானது.வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு விழுப்புரம் அய்யூர்அகரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டுவரப்பட்டது. நேற்றுமுன்தினம் காலை ஸ்டாரங் ரூமிற்கு ஆட்சியர் சுப்ரமணியன், தேர்தல் பொது பார்வையாளர் சீனுவீரபத்ருடு மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டன.