×

முன் அனுமதி பெறாமல் சாலையை தோண்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை நகராட்சிக்கு கோரிக்கை

பரமக்குடி, அக்.23: பரமக்குடி நகராட்சி பகுதிகளில் முன் அனுமதியின்றி சாலையை தோண்டுவது, சாலையை மறைத்து கட்டுமான பொருள்களை கொட்டி வைப்பது போன்ற இடையூறு ஏற்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பரமக்குடி நகராட்சியில் உள்ள  36 வார்டுகளிலும் நகராட்சி சார்பாக தார்சாலை, சிமென்ட் சாலை, பேவர்பிளாக் மூலம் சாலைகள் புதிதாக போடப்பட்டுள்ளது. மேலும், நிதி பற்றாக்குறையால் வார்டுகளில் உள்ள குறைகளை கேட்டறிந்து, முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருதாக அதிகாரிகள் தெரிவித்தாலும், எந்த பணிகளும் நடைபெறாமல் உள்ளது. குறிப்பாக  தெருவிளக்கு, கழிப்பறை வசதிகள் படுமோசமாக உள்ளது. பேருந்து நிலையத்தில் உள்ள இலவச கழிப்பறை சுகாதாரமற்ற நிலையில் துர்நாற்றம் வீசுகிறது.

பரமக்குடி நகராட்சி பகுதிகளில் முன் அனுமதி பெறாமல் கழிவுநீர் கால்வாய், தெரு சாலைகளில் ஆங்காங்கே குழிகள் தோண்டுவதுவதால் குடிநீர் குழாய்கள் உடைந்துவிடுகிறது. இதனால் நகர் பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வது பாதிக்கப்பட்டு வருகிறது. கட்டிடம் கட்டுபவர்கள் முறையாக அனுமதி பெறாமல் சாலைகளில் குழிகள் தோண்டுவதும்,  கட்டிட பொருள்களை சாலை மறைந்து கொட்டிவைத்து கொள்வதும், தண்ணீர் டேங்க் மற்றும் போர்வெல் போன்ற பணிகளால் நகர் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. முன் அனுமதி பெற்றாலும் போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லாமல் பொருட்களை வைத்து கொள்ளவேண்டும். மீறினால், சம்பந்தப்பட்டவர்கள்  மீது கடுமையான நடவடிக்கையுடன் அபராதம் விதிக்கப்பட வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் நகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை