விழுப்புரம், அக். 23: விபத்தில்லா தீபாவளி கொண்டாடும் வகையில் விழுப்புரம் அரசு பள்ளியில் தீயணைப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.விழுப்புரம் கமலா நகரில் உள்ள அரசு நிதி உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் அஷ்ரப்கான் தலைமை தாங்கினார். விழுப்புரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெய்சங்கர், தீயணைப்பு வீரர் வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டு பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடித்து விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவது குறித்து மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி செயல்விளக்கமாக செய்து காண்பித்தனர்.இதில் பள்ளி ஆசிரியர்கள் வத்சலா, லட்சுமி, சங்கரி, ரமணி, உஷா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் விழுப்புரம் பகுதியில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளிலும் தீயணைப்பு துறையினர் செயல்விளக்கம் செய்து காண்பித்து மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.