கிருஷ்ணகிரி, அக்.18: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதால் இடி, மின்னல் போன்றவற்றிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மேலும் பாதிப்புகளை 1077 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர் பிரபாகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் இடி, மின்னல் சமயங்களில், பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். மின்னல் தாக்காமல் இருக்க, கட்டிடங்களில் ஒதுங்கி நிற்க வேண்டும். கட்டிடங்கள் இல்லாத பகுதியாக இருந்தால் குகை, அகழி அல்லது பள்ளமான பகுதிகளை தேர்வு செய்து ஒதுங்க வேண்டும். செங்குத்தான மலை முகடுகளில் மின்னல் தாக்குவது அதிகம். வெட்ட வெளியில் தனித்த மரங்கள் மட்டும் இருக்குமாயின், கைகளால் கால்களை இறுக்க அணைத்து, குனிந்த நிலையில் அமர்ந்து கொள்ள வேண்டும். மேலும், பொதுமக்கள் நீர் நீலைகளில் (படகு, ஓடம்) இருந்தால் அதனை விட்டு வெளியில் வந்துவிட வேண்டும். கால்நடைகளை மரம், மின்கம்பங்கள், இழுவைக் கம்பிகள் போன்றவற்றில் கட்டக்கூடாது.