ஊட்டி, அக்.18: ஊட்டியில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் நூலக வாசகர் வட்ட கூட்டம் நேற்று நடந்தது. வாசகர் வட்ட தலைவர் மணிவண்ணன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் ஊட்டியில் உள்ள மைய நூலகத்தில் 1.20 லட்சம் புத்தகங்கள் உள்ளன. 130க்கும் மேற்பட்ட தினசரிகள் மற்றும் பருவ வெளியீடுகள் பெறப்படுகிறது. மேலும் யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி, ஐபிபிஎஸ், கிளாட், நீட், எஸ்எஸ்சி, ஜெஈஈ, டிஆர்பி, டெட் போன்ற போட்டி தேர்வு புத்தகங்களும் உள்ளன. எனவே பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் இன்றைய சமுதாயத்தை ஆற்றல்மிக்க அறிவார்ந்த, மனிதாபிமான சமுதாயமாகவும் மாற்ற புத்தகம் வாசிப்பதே சிறந்த மருந்தாக அமையும். இதன் அடிப்படையில் ஊட்டியில் வாழும் ஒவ்வொரு குடும்பத்திலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொருவரையும் புத்தகம் வாசிக்க வைக்க வாசகர் வட்டம் மூலம் முழு முயற்சி மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.