தரங்கம்பாடி, அக்.17: பொறையார் அருகே வீரசோழன் ஆற்றுக்கரையில் சாலை அமைக்கும் போது உடைக்கப்பட்ட தடுப்பு பலகையுடன் உள்ள மதகை உடனே கட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நாகை மாவட்டம், பொறையார் பக்கம் உள்ள காட்டுச்சேரி பட்டாபுரம் கிராமத்தில் வீரசோழன் ஆற்றுக்கரையில் வடிகால் வாய்க்கால் உள்ளது. அங்கு தடுப்பு பலகையுடன் கூடிய மதகு கட்டப்பட்டிருந்தது. மண் சாலை அமைக்கும் பணி நடந்த போது தடுப்பலகையுடன் கூடிய மதகை உடைத்து விட்டனர். சாலை போட்ட பின்பு அதை புதிதாக போடாமல் தண்ணீர் செல்லும் குழாய் மட்டும் பதித்துவிட்டு சென்று விட்டனர். இதனால் மழை அதிகம் பெய்யும் பொழுதும், வீரசோழன் ஆற்றில் அதிக தண்ணீர் வரும் பொழுதும் குழாய் வழியாக தடையின்றி தண்ணீர் புகுந்து வடிகால் வாய்க்கால் வழியாக 100க்கும் மேற்பட்ட சாகுபடி வயல்களில் வௌ்ளம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.