திண்டுக்கல்/ வத்தலக்குண்டு, அக். 16: திண்டுக்கல் அருகே வைவேஸ்புரம் நாகையகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக மனிதவள மேம்பாட்டு கூட்டமைப்பு, டாக்டர் ஏபிஜே.அப்துல்கலாம் சேவை மையம் இணைந்து முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 88வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் விமானபடை வீரர் பெருமாள் தலைமை வகிக்க, அப்துல்கலாம் சேவை மைய துணை செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை காந்திமதி வரவேற்றார். நிகழ்ச்சியை காதர்பாட்ஷா தொகுத்து வழங்கினார். டிஎஸ்பி அய்யர்சாமி, காந்திமன்ற தலைவர் ஜெயசீலன் சிறப்புரையாற்றி மரக்கன்று, பனைவிதை, கல்வி உபகரணங்கள் வழங்கினர். தொடர்ந்து 2018-19ம் ஆண்டில் 10 வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றமைக்கு பாராட்டி சிறந்த கற்பித்தல் பள்ளி விருது வழங்கப்பட்டது.திண்டுக்கல் பேகம்பூரில் நடந்த விழாவிற்கு தேசிய ஒருமைப்பாட்டு இயக்க தலைவர் அப்துல் ஜப்பார் தலைமை வகிக்க, காந்தி மன்ற இயக்க பொதுச்செயலாளர் மருது முன்னிலை வகித்தார். இதில் நிர்வாகிகள் முகமது ஜக்கிரியா, கார்த்திக், கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.