இளையான்குடி, அக்.15: இளையான்குடி பகுதியில் கடந்த சில நாட்களாக பரவும் காய்ச்சலால், டெங்கு பீதியில் மக்கள் உள்ளனர். இளையான்குடி ஒன்றியத்தில் 55 ஊராட்சிகளும், 18 வார்டுகளாக பேரூராட்சி நிர்வாகமும் செயல்படுகிறது. பேரூராட்சி நகர் பகுதியில் மட்டும் சுமார் 40 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் தேங்கும் குப்பைகளை பேரூராட்சி நிர்வாகம் தினமும் அகற்றி வந்தாலும், கழிவுநீர் அடைப்பு மற்றும் கொசு மருந்து தெளிப்பது உள்ளிட்ட பணிகள் மந்தநிலையில்தான் உள்ளன. பல வாய்க்கால்களின் சிலாப்புகள் பெயர்ந்தும், குப்பைகள் தேங்கியும் உள்ளதால் கொசு உற்பத்தி தாராளமாக உள்ளது. அதனால் டெங்கு உள்ளிட்ட மர்மகாய்ச்சல் இளையான்குடியில் வேகமாக பரவிவருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர். உயிர் பயத்தில் சிகிச்சைக்காக மதுரை, பரமக்குடி அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சேர்ந்து பல பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மேலும் கடந்த ஒரு ஆண்டுகளாக, இந்த பேரூராட்சியில் சுகாதார ஆய்வாளர் நியமிக்கப்படாமல், பல முறை கலெக்டர் மற்றும் மாவட்ட உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்ததின்பேரில், நீண்ட நாட்களுக்குப் பின் கடந்த வாரம் சுகாதார ஆய்வாளர் நியமிக்கப்பட்டுள்ளார். அதனால் ஒரு ஆண்டு இடைவெளியில் பல பணிகள் உள்பட, சுகாதாரமும் இளையான்குடியில் முடங்கிப்போயுள்ளது என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.