விழுப்புரம், அக். 15: பழங்குடியின இருளர்கள் அரசு தொகுப்புவீடுகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் மனு அளித்தனர்.விழுப்புரம் மாவட்டம் செஞ்சி என்.ஆர்.பேட்டையை சேர்ந்த மாரியப்பன் உள்ளிட்ட பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: 41 ஆண்டுகாலமாக ஏரி புறம்போக்கு நீர்பிடிப்பு பகுதியில் வாழ்ந்து வந்த பழங்குடி இருளர் சமுதாயத்தை சேர்ந்த 21 குடும்பங்களுக்கு அரசு மாற்றிடமும், வீட்டுமனை பட்டாவும் வழங்கியது. அப்பகுதியில் பசுமை வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கினார். நாங்கள் வறுமையிலும் கஷ்டப்பட்டு வீடு கட்டிவரும் நிலையில் பக்கத்தில் நிலம் வைத்துள்ளவர் பழங்குடியினர் அருகில் குடிவந்தால் பாதிக்கும் என்று கருதியும், அவர் போட்டுள்ள வீட்டுமனை விற்பனையாகாது என்பதால் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையிலும், வீடுகட்ட விடாமல் செய்து வருகிறார். அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.