காரிமங்கலம், அக்.10: காரிமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன், பொதுமக்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்களிப்பில் வளர்க்கப்பட்ட பச்சை மூங்கில் மரங்களை, தலைமையாசிரியர் கிருஷ்ணமூர்த்தி தன்னிச்சையான முறையில், பள்ளி மாணவர்களை மூலம் வெட்ட வைத்துள்ளார். இதை கேட்க சென்ற பொதுமக்களையும் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், விசாரணை நடத்த கலெக்டர் மலர்விழி உத்தரவிட்டார். அதன் பேரில், தாசில்தார் கலைசெல்வி மற்றும் வருவாய்துறை அதிகாரிகள், பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.