வள்ளியூர்,அக்.1: வள்ளியூரில் ரயில்வே சுரங்கபாதை பணிகளை ஆய்வு செய்த ஞானதிரவியம் எம்பி தற்காலிக மாற்று பாதையை உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில்வே அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.வள்ளியூரில் கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதம் சுரங்கபாதை பணி துவங்கப்பட்டது. 2வருடமாகியும் இப்பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் பள்ளி மாணவ, மாணவிகள் கடந்து செல்ல முடியாமல் அவதிபட்டு வந்தனர். இப்பணிகளை தொடர தற்காலிக தார்சாலை பொதுப்பணித்துறையால் அமைக்கப்பட்டது. தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட தார்சாலை சில நாட்களில் சிதிலமடைந்தது.மீண்டும் மறுசீரமைப்புக்கு பின் அமைக்கப்பட்ட சாலையில் இருசக்கர வாகனங்கள் பொதுமக்கள் பயன்பெற்று வந்தனர். தற்போது பெய்த மழையினால் அந்த சாலையும் சேதமடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், வாகனஓட்டிகள் அவதிகுள்ளாகின்றனர். பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று ரயில்வே சுரங்கபாதை அமைக்கும் பணியை ஞானதிரவியம்எம்.பி நேரில் பார்வையிட்டார். ரயில்வே பாதை அருகில் உள்ள பொதுமக்கள் மற்றும் ரயில்வே பயணிகள் சங்க நிர்வாகிகள், ஆட்டோ சங்க நிர்வாகிகள் ஆகியோர் எம்பியிடம் மனு அளித்தனர். ரயில்வே சுரங்கபாதை பணிகள் பாதியிலே நிறுத்தப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு தற்காலிக மாற்று பாதையை உடனடியாக அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்ககுமாறு ரயில்வே அதிகாரிகளிடம் ஞானதிரவியம் எம்பி வலியுறுத்தினார். அதிகாரிகள் பணிகளை விரைந்து முடிப்பதாக தெரிவித்தனர்.