விழுப்புரம், செப். 26: விழுப்புரம் மாவட்டத்தில் முதுகலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் தேர்வு நாளை முதல் வரும் 29ம் தேதிவரை நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் சுப்ரமணியன் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்புக்கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் ஆட்சியர் சுப்ரமணியன் பேசியதாவது: தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் முதுகலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநருக்கான கணினி வழி தேர்வு 27ம்தேதி (நாளை) முதல் 29ம் தேதி வரை நடக்கிறது. விக்கிரவாண்டி சூர்யா பொறியியல் கல்லூரியில் 600 பேரும், அரசூர் விஆர்எஸ் பொறியியல் கல்லூரியில் 900 பேரும், சேதராப்பட்டு ஸ்ரீ அரவிந்தர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 600 பேரும், திருநாவலூர் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 660 பேர் என மொத்தம் 2,760 பேர் தேர்வு எழுத உள்ளனர். மின்வாரியத்தினர் தேர்வு நடைபெறும் மூன்று நாட்களுக்கும் தடையின்றி மின்சாரம் வழங்கவேண்டும்.