மயிலாடுதுறை செப்.26: மயிலாடுதுறை அருகே குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் வாய்க்காலை தூர்வாரத பிடிஓவை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மறையூர் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு கோவங்குடி மற்றும் மறையூர் வடிக்கால் வாய்கால்களை தூர்வாராததாலும், ஆக்கிரமிப்பை அகற்றாததாலும் தற்போது பெய்த மழைநீர் கடந்த ஒருவார காலமாக குடியிருப்பை சுற்றி தேங்கியுள்ளது. இதனால் இப்பகுதியில் தூர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மயிலாடுதுறை பிடிஓ மற்றும் வருவாய்த்துறையினரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மறையூர் மெயின் ரோட்டில் அரசு பேருந்தை சிறைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.