விழுப்புரம், செப். 25: விழுப்புரம் அருகே நள்ளிரவில் போதை ஆசாமி பேருந்தை கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரிக்கு சொந்தமான பேருந்து பழுது பார்ப்பதற்காக கோலியனூர் மெக்கானிக் செட்டுக்கு வந்துள்ளது. அதனை நேற்றுமுன்தினம் ஊழியர்கள் பழுது பார்த்துவிட்டு விழுப்புரம்- புதுச்சேரி சாலையோரம் நிறுத்தி வைத்திருந்தனர். இரவு காவலர் தட்சிணாமூர்த்தி என்பவர் மழை பெய்ததால் செட் உள்ளே சென்றார். அப்போது 2.30 மணியளவில் வெளியே வந்துபார்த்தபோது, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து மாயமாகி இருந்தது. இதையடுத்து வாட்ச்மேன் தட்சிணாமூர்த்தி செட் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவர் வளவனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் பேருந்து எண்ணை குறித்துக் கொண்டு மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்து உஷார்படுத்தினர்.