உளுந்தூர்பேட்டை, செப். 20: உளுந்தூர்பேட்டை அருகே இலுப்பையூர் கிராமத்தை சேர்ந்தவர் மாயவன் மகன் ராஜமாணிக்கம்(76). சம்பவத்தன்று வீட்டில் மின்சாரம் இல்லாததால் மண்ணெண்ணெய் விளக்கை ஏற்றி வைத்துவிட்டு ராஜமாணிக்கம் படுத்து தூங்கி உள்ளார். அப்போது விளக்கு தவறி விழுந்து கூரை வீடு தீப்பிடித்து எரிந்துள்ளது.
அப்போது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ராஜமாணிக்கம் தீவிபத்தில் சிக்கி கொண்டார். இதில் அவரது உடல் முழுவதும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி ராஜமாணிக்கம் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து உளுந்தூர்பேட்டை காவல்நிலையத்தில் ராஜமாணிக்கம் மகள் பொன்னாஞ்சாலை(36) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கோபி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.