கிருஷ்ணகிரி, செப்.17: கிருஷ்ணகிரியில் ஊட்டச்சத்து விழிப்புணர்வை வலியுறுத்தி, ராஷ்டிய போஷான் பிரசார வாகனத்தை கலெக்டர் பிரபாகர் கொடியசைத்து துவக்கி வைத்தார். கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக வளாகத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை சார்பில், ராஷ்டிய போஷான் மா-2019 என்ற பிரசார வாகனம் மற்றும் பேரணியை கலெக்டர் பிரபாகர் கொடியசைத்து துவக்கி வைத்து பேசினார். அவர் பேசுகையில், தேசிய ஊட்டச்சத்து மாதமான செப்டம்பர் மாதம் முதல் வாரத்திலிருந்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், வளர் இளம் பெண்களுக்கு அங்கன்வாடி மையங்களில் எடை பார்த்தல் மற்றும் வளர்ச்சி கண்காணிக்கப்படும். சுகாதார துறையுடன் இணைந்து வீடுகளை பார்வையிடுதல் மூலம் ரத்தசோகை, குறைந்த எடை மற்றும் வளர்ச்சி குறைபாட்டை கண்டறிதல், பச்சிளம் குழந்தைகள் உணவூட்டுதல், ஊட்டச்சத்து மற்றும் சுகாதார கல்வி அளித்தல், அங்கன்வாடி மையங்களில் உட்புற, வெளிப்புற தூய்மை பணி மேற்கொள்ளுதல், குழந்தைகளுக்கு கை கழுவும் பழக்கத்தை கற்றுக்கொடுத்தல், சுத்தமான காய்கறிகள் அடங்கிய வீட்டுத்தோட்டங்களை தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் மூலம் அமைத்து கொடுத்தல், ஆரம்ப கால குழந்தை பருவ பராமரிப்பு மற்றும் கல்வி நாள் அனுசரித்தல் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.