காரைக்கால், செப்.17: காரைக்கால் திருமலைராயன்பட்டினம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில், கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். காரைக்கால் திருமலைராயன்பட்டினத்தில் நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயிலில் கடந்த 1991ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 28 ஆண்டுகள் நிறைவுபெற்ற நிலையில், மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த, கோயில் நிர்வாகம் முடிவு செய்து திருப்பணிகளை தொடங்கியது. சுமார் ரூ.40 லட்சம் செலவில் நடைபெற்று வந்த இப்பணிகள் நிறைவு பெற்றநிலையில் நேற்று மகா குபாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி, கோயில் சன்னதியில் புதிதாக பெருமாள் சயன கோலம், நின்ற கோலம், அமர்ந்த கோலத்தில் சுவரில் சுதை வேலைப்பாடுகளுடன் சிலையாக செய்து வைக்கப்பட்டுள்ளது. தாயார் சன்னதி பிராகார பக்க சுவரில் அஷ்ட லட்சுமிகள் சிலைகள் தயார் செய்து வைக்கப்பட்டு உள்ளது. ஆஞ்சநேயர் சன்னதி வெளிப்புற சுவரில், அவரது பல்வேறு கோலங்கள் சுதை வடிவில் செய்யப்பட்டுள்ளது.