ஆத்தூர், செப்.10: ஆத்தூர்- பெரம்பலூர் ரயில் பாதை திட்டத்தை உடனே செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென தென்னக ரயில்வே பொது மேலாளரிடம், கள்ளக்குறிச்சி திமுக எம்.பி. கவுதம சிகாமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் உள்ள தென்னக ரயில்வே பொது மேலாளர் அலுவலகத்தில், நேற்று சென்னை, சேலம் ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட எம்பிக்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி தொகுதி எம்பி கவுதம சிகாமணி கலந்து கொண்டு, தென்னக ரயில்வே பொது மேலாளரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:சின்னசேலத்தில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு ரயில்வே பாதை அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளாக மிகவும் மந்த கதியில் நடந்து வருகிறது. இதனை விரைந்து முடித்து, ரயில் போக்குவரத்துக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். சின்னசேலம் ரயில் நிலையத்தில் உள்ள பயணிகள் காத்திருப்பு அறையை நவீன வசதிகளுடன் கூடிய வகையில் மாற்றி அமைக்க வேண்டும். சின்னசேலம் மற்றும் மேல்நாரியப்பனூர், மின்னாம்பள்ளி, எருமாபாளையம், அயோத்தியாபட்டணம் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டுகளை அகற்றி விட்டு, மேம்பாலங்கள் அமைக்க வேண்டும். சென்னை- சேலம் மார்க்கத்தில் இயக்கப்படும் ரயில்கள், தலைவாசல் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.