மஞ்சூர், செப்.10:அவலாஞ்சி அணை திறக்கப்படும் என்ற அறிவிப்பால் குந்தா அணை திறக்கப்பட்டு 5 மணி நேரம் நீர் வெளியேற்றப்பட்டது.நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்தது. குறிப்பாக நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டியது. இதனால் மின்சார உற்பத்திக்கு முக்கிய ஆதாரமாக உள்ள அனைத்து அணைகளிலும் நீர் மட்டம் பெருமளவு உயர்ந்தது. இதை தொடர்ந்து அப்பர்பவானி, குந்தா, பைக்காரா, கிளன்மார்கன், போர்த்திமந்து உள்ளிட்ட பெரும்பாலான அணைகள் திறந்துவிடப்பட்டது. இந்நிலையில் இடையில் சில நாட்கள் மழை ஓய்ந்திருந்த நிலையில் கடந்த சில தினங்களாக மீண்டும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் மூலம் நீர் வரத்து அதிகரித்து அணைகள் நிரம்பியதால் சமீபத்தில் பைக்காரா, முக்குருத்தி, கிளன்மார்கன் உள்ளிட்ட அணைகள் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் மஞ்சூர் அருகே உள்ள அவலாஞ்சி அணைக்கு நேற்று முன்தினம் காலை முதலே நீர் வரத்து வினாடிக்கு, வினாடி அதிகரித்தது. இதை தொடர்ந்து மின்வாரிய அதிகாரிகள் அணையின் நீர்வரத்து நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வந்தார்கள்.