நாமக்கல், ஆக.14: கலெக்டர் ஆசியாமரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தற்போது, கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால், கே.ஆர்.எஸ், கபினி அணைகளிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த தண்ணீரால் தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103 அடியை எட்டி உள்ளது. இதை தொடர்ந்து நேற்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீரை திறந்து விட்டார். தற்போது 3 ஆயிரம் கன அடிவீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், காவிரியில் தண்ணீர் ஆர்பரித்து செல்கிறது. எனவே காவிரி ஆற்றின் கரையோர கிராமங்களில் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். கரையோரம், கால்வாய்கள் மற்றும் நீர் நிலைகளில் குளிக்கவோ, நீச்சல் அடித்தல் மற்றும் மீன்பிடிக்க கூடாது. மேலும் செல்பி எடுக்கக்கூடாது. குழந்தைகளை நீர்நிலைகளின் அருகே அழைத்து வர வேண்டாம். எனவே பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.