தீ விபத்து நிவாரண உதவி வழங்கிய அரசு பள்ளி மாணவர்கள்

ரிஷிவந்தியம், ஜூலை 24:

ரிஷிவந்தியம்  அருகே தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு மாணவர்கள், ஆசிரியர்கள்  சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.ரிஷிவந்தியம் அடுத்த  வாணாபுரம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த பாவாடை மகன் செல்வராஜ் என்பவரது  வீட்டில் கடந்த 10ம்தேதி ஏற்பட்ட தீ விபத்தில் வீடு முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இத்தீவிபத்தில் பாதிக்கப்பட்ட, அரியலூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்  பயிலும் ஆறாம் வகுப்பு மாணவன் ராஜேஷின் குடும்பத்திற்கு, அப்பள்ளியின்  மாணவர்கள், ஆசிரியர்கள் சார்பில் ரூ.5057 நிவாரண தொகையும், ஒருமாதத்திற்கு தேவையான அரிசி உள்ளிட்ட  அத்தியாவசிய பொருட்கள், உடமைகள் வழங்கப்பட்டது. இதனை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னப்பன், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் வழங்கினார்.  அப்போது ஆசிரியர்கள் கன்னி, வயணக்கனி, தனசேகர், ராபர்ட்கென்னடி, லூர்துசாமி, ரட்சகன்  சகாயராஜ், அருள் செல்வம், சிவசங்கரி ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: