திருக்கோவிலூர், ஜூலை 23: திருக்கோவிலூர் அருகே 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்க கோரி கஞ்சி தொட்டி போராட்டம் நடந்தது.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த வீரபாண்டி கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் நல கோரிக்கைகளை வலியுறுத்தி கஞ்சி தொட்டி ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளை கழக செயலாளர்கள் ராமமூர்த்தி, ஏழுமலை ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட செயற்குழு வேல்மலை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 100நாள் வேலை திட்டத்தின் கீழ் வழக்கம் போல் வேலை கொடுக்க வேண்டும், வீரபாண்டியில் அரசு வங்கி கிளை தொடங்க வேண்டும், ஆரம்ப சுகாதார மையத்தில் போதிய மருத்துவரை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடந்தது. இதில் வீரபாண்டி, வசந்தகிருஷ்ணாபுரம், தண்டரை ஆகிய கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த கண்டாச்சிபுரம் தாசில்தார் சீனுவாசன், முகையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜானகி ஆகியோர் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் வழக்கம் போல்வேலை தருவதாக உறுதியளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.