பள்ளி மாணவன் தூக்கு போட்டு சாவு

வானூர், ஜூலை 23: வானூர் தாலுகா ஆரோவில் அருகே உள்ள குயிலாப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி பிரேமா. இவர்களது மகன் சுதன் (15). இவர் புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். விடுமுறை தினமான நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்த சுதன் செல்போனில் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அவருடைய தாயார் பிரேமா, 10ம் வகுப்பு படிக்கிறாய், ஏன் செல்போனில் விளையாடி கொண்டிருக்கிறாய்? போய் படி என்று கண்டிப்புடன் கூறியுள்ளார். பின்னர் கணவன், மனைவி இருவரும் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். அந்த சமயத்தில் வீட்டில் தனியாக இருந்த சுதன் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். வீட்டிற்கு வந்த பெற்றோர் மகன் தூக்குபோட்டு இறந்ததை கண்டு கதறி அழுதனர். சம்பவம் குறித்து வேல்முருகன் ஆரோவில் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிகுளம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: