காரைக்கால், ஜூலை 16: வரலாற்று புகழ்மிக்க காரைக்கால் அம்மையார் கோயில் மாங்கனித் திருவிழாவையொட்டி, இன்று (16ம்தேதி) பிச்சாண்டவர் வீதியுலா நிகழ்ச்சிநடைபெறவுள்ளது.இறைவனின் (பரமசிவன்) திருவாயால் ‘அம்மையே’ என்றழைக்கப்பட்ட பெருமைக்குரியவர் காரைக்கால் அம்மையார். காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனித்திருவிழா நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு மாங்கனித்திருவிழா கடந்த 13ம் தேதி மாலை மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது. திருவிழாவின் இரண்டாம் நாள் முக்கிய நிகழ்ச்சியாக 14ம் தேதி காலை 10 மணிக்கு காரைக்கால் அம்மையாருக்கும், பரமதத்த செட்டியாருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி மிக விமரிசையாக நடைபெற்றது. திருவிழாவின் மூன்றாம் நாள் முக்கிய நிகழ்ச்சியாக, நேற்று (15ம்தேதி) மாலை பிச்சாண்டவர் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இன்று (16ம்தேதி) காலை 6 மணிக்கு பரமசிவன் பிச்சாண்டவர் கோலத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சியும், அதுசமயம், பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு, வீட்டு வாசல், மாடி கூறைகளில் இருந்து மாங்கனிகளை வாரி இறைக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. மாலை 6 மணிக்கு காரைக்கால் அம்மையார் பிச்சாண்டவரை எதிர்கொண்டு அழைத்து சென்று அமுதுபடையல் படைக்கும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.