திருப்பூர், ஜூலை 11:ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருப்பூர் இன்பன்ட் பள்ளியில் நேற்று நடந்தது. தமிழகம் முழுவதும், இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை தமிழக உள்துறை மற்றும் டி.ஜி.பி., நிறைவேற்ற வேண்டும் என, கூறப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டாதவர்களின் டிரைவிங் லைசென்ஸ் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருப்பூர் இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக் பள்ளி சாரணம் இயக்கம் மற்றும் நல்லசமாரியன் மாணவர்கள் இணைந்து ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை, பள்ளி வளாகத்தில் நேற்று நடத்தினர். நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் அருட்தந்தை ஆரோக்கிய ததேயுஸ் தலைமை வகித்தார். இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு, பள்ளிக்கு குழந்தைகளை விட வந்திருந்த பெற்றோர்களுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விளக்க்ினர். தொடர்ந்து ஹெல்மெட் அணியாமல் சென்றால் ஏற்படும் ஆபத்து குறித்து நாடகமாக நடித்துக் காட்டினர். மேலும், மாணவர்கள் இருபுறமும் நின்றுக்கொண்டு, ஹெல்மெட் அணியாமல் வந்த பெற்றோர்களிடம் பாதுகாப்பான பயனத்திற்கு ஹெல்மெட் அணியுங்கள் என வலியுறுத்தினர். இந்நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.