மயிலம், ஜூன் 27: மயிலம் அருகே கூட்டேரிப்பட்டில் உள்ள மயிலம் பிடிஒ அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கிராம மக்களுக்கு நூறு நாள் திட்டத்தில் வேலை வழங்க வேண்டும், வறட்சியில் குடிநீர் வசதியை சரியாக செய்து தராத நிர்வாகத்தை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது. மயிலம் ஒன்றிய தலைவர் மணி தலைமை தாங்கினார். சிபிஎம், ஒன்றிய செயலாளர் கலைச்செல்வன், மாவட்ட துணை செயலாளர் அபிமன்னன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் தமிழரசன் வரவேற்றார். வழக்கறிஞர் கோதண்டம், மாவட்ட தலைவர் அர்ச்சுனன், மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினர். இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ், நிர்வாகிகள் பாக்கியநாதன், பாலாஜி, சிவக்குமார் கோவிந்தசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.