மரக்காணம், ஜூன் 27: மரக்காணம் பேருந்து நிலையம் அருகில் உள்ளது ஆண்டிக்குளம். இந்த குளத்து தண்ணீர் 20 ஆண்டுகளுக்கு முன்புவரை பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்தது. மேலும் இதில் நீர் நிரம்பினால் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டமும் பாதுகாக்கப்பட்டது. ஆனால் இந்த குளத்தை சுற்றிலும் இருந்த அரசுக்கு சொந்தமான இடங்களை ஒரு சிலர் ஆக்கிரமிப்பு செய்துவிட்டதாக பொதுமக்கள் குறை கூறுகின்றனர். இதனால் இக்குளத்தின் பரப்பளவு வெகுவாக குறைந்துவிட்டது. இதுபோல் இதன் அருகில் வீடு கட்டியுள்ளவர்கள் தங்களது வீட்டு கழிவுநீரை நேரடியாக குளத்தில் விட்டு விடுகின்றனர். இதன் காரணமாக குளத்தின் நீர் மாசு அடைந்துவிட்டது. மேலும் பேருந்து நிலையம் பகுதியில் அள்ளப்படும் குப்பைகளையும் இந்த குளத்தில்தான் கொட்டி விடுகின்றனர். இதுபோன்ற காரணங்களால் ஆண்டுதோறும் குளத்தின் ஆழம் குறைந்து கொண்டே வருகிறது. இந்த குளத்தில் பேரூராட்சி நிர்வாகத்தினரும் குப்பைகளை கொட்டுவதாக பொதுமக்கள் குறை கூறுகின்றனர். தற்போது பருவகால மாற்றத்தினால் ஆண்டுதோறும் பருவ மழையும் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து குடி நீருக்கு தட்டுப்பாடு உண்டாகும் அவல நிலை உள்ளது.