சின்னசேலம், ஜூன் 27: கச்சிராயபாளையம் கோமுகி சர்க்கரை ஆலை பகுதியில் இருந்து பதிவு கரும்புகளை தனியார் ஆலைக்கு அனுப்பி வைக்கும் அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். கச்சிராயபாளையம் கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை துவக்கிய காலத்தில் இருந்து ஒரு கரும்பு அரவை பருவத்திற்கு சராசரியாக 4லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டு வருகிறது. மேலும் கரும்பு விவசாயிகளின் நலன்கருதி சிறப்பு கரும்பு அரவையும் துவக்கி சுமார் ஒரு லட்சம் டன் கரும்பு அரவை செய்து வருகின்றனர். இருப்பினும் கடந்த இரண்டு ஆண்டுகளாக போதிய பருவமழை இல்லாத காரணத்தால் கரும்பு அரவையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு கரும்பு ஓரளவுக்கு அறுவடைக்கு தயாரான நிலையில் வயல்கள் காய்ந்து சருகாகி வருகிறது. இதனால் வயலை உழுது, பார் அமைத்தல், நடவு கரும்பு வாங்கி நடவு செய்தல், உரமிடுதல், வறட்சியிலும் சொட்டு நீர் பாசனம் செய்தல், களையெடுத்தல் போன்ற பல்வேறு செலவுகளை செய்தும் பயனில்லாமல் கடனாளியாகும் நிலையில் விவசாயிகள் உள்ளனர்.