விழுப்புரம், ஜூன் 26: விழுப்புரத்தில் இலவச பால் கலப்பட பரிசோதனை முகாமை ஆட்சியர்சுப்ரமணியன் துவக்கி வைத்தார்.விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிக்கான இலவச பால் கலப்பட பரிசோதனை முகாமை ஆட்சியர் சுப்ரமணியன் துவக்கி வைத்தார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் விநியோகிக்கப்படும் பாலின்தரம் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில் பால் கலப்பட பரிசோதனை முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று விழுப்புரம் நகராட்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பசும்பால், எருமைமாட்டின் பால் ஒரு லிட்டர் அளவிற்கு குறையாமல் ஆய்வுக்கு கொண்டு வந்தனர். பின்னர் பாலில் யூரியா, காஸ்டிக்சோடா, திரவசோப்பு, சோடா, ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் உப்பு போன்றவற்றின் கலப்படம் உள்ளதா என இலவசமாக ஆய்வு செய்து கொடுக்கப்பட்டது.